Friday, November 03, 2023

கல்வி தேவையா?.

கல்வி தேவையா?. SIN, COS TAN போன்ற கணக்கீடுகள் னது வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும்பொழுது அதை எதற்க்காக படிக்கவேண்டும் போன்ற கேள்விகள் சங்கித்தனமான பரப்புரைகள், பிக்பாஸ் மற்றும் நீயா நானா புண்ணியத்தில் மக்களிடையே விவாதப்பொருட்கள் ஆகி இருக்கின்றன.

மொழி, அறிவியல், கணக்கியல் போன்ற தொழில்முறை அல்லாத பொதுக் கல்வியில் கற்ற வித்தைகள் வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ யாரும் பயன் படுத்தப்போவதே இல்லை என்றுதான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டமாக தத்தனித்தனி இனமாக வாழ்ந்து மற்ற இனத்தினை சண்டையிட்டு அழித்து பொருட்களை கொள்ளையிட்டு வாழ்ந்திருந்தத மனித இனம்.

சண்டையிடுவது தவறு, இன்றைக்கு இருக்கும் உணவு எத்தனைபேருக்கு இத்தனைநாள் தேவைப்படும் எவ்வளவு சேமித்துவைக்கவேண்டும். மற்றும் உணவை நாமே எப்படி தயாரிக்கலாம் என்றல்லாம் எண்ணி நாகரீக முன்னேற்றம் அடைந்ததெல்லாம் என்னவென்று நினைக்கிண்றீர்கள்?

சமூகவியல், கணக்கியல், அறிவியல் போன்ற கல்விகளினால்தான் நிகழ்ந்தது இது என்பதுதான் உண்மை..

இதெல்லாம் பொது அறிவுதான் இதை கல்வி என்று சொல்ல முடியாது என்று நினைப்பீர்களேயானால் அது தவறு.

பொது அறிவு கொண்ட ஒருவர் அவைகளை மற்றவருக்கு அறிவுறுத்தி கடத்தினால் மட்டுமே இது செயலாக்கம் ஆகும். அந்த அறிவுறுத்தல் என்பதுதான் கல்வி ஆகும்.

கல்வியானது தேடும் ஆர்வத்தை உண்டாக்கி, சிந்திக்கும் சக்தியை அதிகரித்து , குழப்ப சிக்கலுக்கு தீர்வு காணவும் , புதிய உத்திகளை உருவாக்கவும் கற்றுத்தருகின்றது. எந்த ஒரு தொழிலுக்கும் இவைகள் மூன்றும் தேவைதான்.

கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும். விவசாயம் செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும், கண்டவர்கள் பேச்சை கேட்டு கல்வியை கைவிடல் ஆகாது.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

பள்ளிப் படிப்பு அல்லது கல்லூரி படிப்புக்குப் பிறகுதான் நமக்குள் என்ன ஆர்வம் இருக்கின்றது என்று தெரியும். அதன் பிறகு அதற்க்கு தகுந்த தொழில் கல்வியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அப்படி சிரமப்பட்டு படிக்கவேண்டுமா என்றால் இல்லைதான். முடிந்த அளவிற்கு சற்று முயற்சி செய்யத்தான்வேண்டும்.

என்னதான் செய்தாலும் நமக்குள் இருக்கும் ஆர்வத்தை அறிந்துகொள்ளலாமே தவிர நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான திறமையை அந்த கடவுள் தவிர யாராலும் அறியமுடியாது.எனக்குத்தெரிந்து இந்த உலகில் தான் கொண்ட திறமைக்கேற்ற தொழிலை பெற்றவர்கள் இரண்டே பேர்தான்,

1). இளையராஜா
2). பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குனர்)

இரண்டு கேள்விகள் உங்களுக்கு

1).அணில் அம்பானி மகனுக்கு கல்வி தேவையா?
2). SIN, COS கணக்கீடுகளை வாழ்க்க்கையில் போட்டுப்பார்காத மனிதனே இவ்வுலகில் இருக்கமுடியாது. வாழ்க்கை தேவைக்கு நீங்களும் போட்டுத்தான் இருக்கிறீர்கள் எப்படியென்று தெரியுமா?



Sunday, July 09, 2023

தமிழ் மன்றம் இளசு அண்ணா

 உயிர் வாழ்தல் எனும் நோக்கத்தை அடுத்து தேடுதல் என்பது மனிதனின் முக்கியமாக இருக்கின்றது. எத்தனையோ தேடல்கள், 


எந்த ஒரு கதையையும் (நாவல், சிறுகதை, திரைப்படம்) பார்த்தால் அதன்  மூல முக்கிய கருவானது தேடலாகத்தான் இருக்கும். மனிதனின் இந்த தேடலை அருமையானதொரு வியாபார உத்தியாக்கி வெற்றிகொண்டது கூகிள். 

பலவகை தேடலில் சுவாரசியமானது, நேரில் பார்க்காத ஒருவரை அவரைப்பற்றிய கேள்விகளினால் தேடுவதாகும், 

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் தேன்மொழி என்பவரை பற்றி அனைவரும் சிலாகித்து பேசுவதை  கேட்கையில் அவரை சந்திக்கத்துடித்து தேடியலைந்து தன வாழ்க்கையை தொலைத்து பின்னர் எப்படி வாழ்க்கையை சரி செய்கின்றார் அந்த கதாநாயகன் என்ற கதை.

மாறா திரைப்படத்தில் கதாநாயகன் சுவற்றில் வரைந்த ஓவியங்களை கண்டு பிரமித்து, வரைந்தவரின் உள்ளக்கிடக்கை எப்படிப்பட்டதாக இருந்தால் இப்படி ஒரு ஓவியமாக வரும் என்று அவரை சந்திக்க தேடியலைந்து கண்டுபிடித்து சேரும் அந்த கதாயாயாகியின் கதை.

Wicker Park திரைப்படத்தில் திருமணமான விளம்பர நிர்வாகி ஒருவர் தற்செயலாக பார்க்கும் ஒருபெண் தனது பழைய காதலி இருப்பதால் அவரை வெறித்தனமாக தேடியலைந்து சந்திக்கும் கதை .

வெற்றிவிழா திரைப்படத்தில் சுயத்தை தொலைத்து தன்னையே தேடியலைந்து அறியும் கதாநாயகனின் கதை.

(இன்னும் பல)

இவைகள் போலவே எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

ஆமாம் நானும் இளசு அண்ணா என்பவரை தேடியலைந்து இன்றுவரை சந்திக்காமலும் இருக்கின்றேன். நான் மட்டுமல்ல என்னைப்போல நூற்றுக்கணக்கணவர்கள் தேடியலைந்து கொண்டுதானிருக்கின்றனர்.

2000ம் ஆண்டு வாக்கில் , முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் அதிகம் இல்லாத நாட்களில் http://tamilmantram.com/ தளம்தான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. துபாய் , அமெரிக்கா , ஜப்பான் , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , டென்மார்க் (இன்னும் பல )  நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த தமிழர்களை இணைத்த அந்த தமிழ் மன்றத்தில் குழு தலைவராக இருந்தவர்தான் இளசு அண்ணா . நேரில் சந்திக்காத, முகமறியாத ஒருவர் எப்படி நூற்றுக்கணக்கணவரின் அன்புக்குரிய அண்ணனாக ஆகா முடியும்?

முடியும்தான். நான் கீழே கொடுத்துள்ள இணைப்பினை பாருங்கள் அவரை காணாமல் துடித்து போன தம்பி தங்கைகளின் பதிவுகள்.

நான் குடும்பத்தை பிரிந்து 2004ம் வருடம் ஜப்பான் நாட்டிற்க்கு சென்றபொழுது பிரிவுத்துயர் மற்றும் குடும்ப நோயினால் பாதிக்கப்பட்டு மனம் குழம்பிஇருக்கையில்தான் இளசு அண்ணா அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் தமிழ் மன்றத்தில் கிடைத்தது. அவரும் புலத்தினை  பிரிந்தது இங்கிலாந்தில் பணியாற்றுவதாக சொன்னார். ஆனால் உண்மை பெயர் மற்றும் தொடர்பு விவரத்தை தரவேயில்லை. உடன் பிறந்த அன்னான் போல என்பால் அக்கரை கொண்டிருந்தார்.

அவர் என்னை மிகவும் பாதித்தது ஒரு உரையாடலில்தான்.

மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை உண்டா என்ற தலைப்பிலான விவாதத்தில் நான் ஒரு பதிலிட்டிருந்தேன்.

அதைக்கண்டு வியந்த இளசு அண்ணா அவர்கள் ஒரு அறிவியல் கோட்பாட்டினை சொல்லி , இப்படிப்பட்ட ஒரு சிக்கலான அறிவியல் கோட்பாட்டினை இப்படி எளிதாக விளக்கிவிட்டீர்களே இந்த புதிரை  விடுவித்த அந்த உலகப்புகழ் பெற்ற அறிவியல் வித்தகர்கூட குழப்பமான விளக்கம்தான் தந்திருந்தார் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.

நான் திடுக்கிட்டு போய்விட்டேன். அந்த அறிவியல் கோட்பாட்டினை படித்து பார்த்து வியந்தேன், அப்படியே நான் நினைத்தது போலவே இருந்தது. அப்பொழுதுதான் எனக்குள் இயற்பியல் அறிவு தொடர்பான சிந்தனைகளும் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அது குறித்த ஆராய்ச்சியில் இன்னும் இருக்கின்றேன். 

அது குறித்து பின்னர் விளக்குகின்றேன். 

இங்கே பாருங்கள் இளசு அண்ணா குறித்து மற்றவர்களின் தேடல் மற்றும் கோரிக்கைகள் . 

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5344.html

இதில் பாருங்கள், அவர் திரும்ப வருவதாக அறிவித்த பின் மற்றவர்களின் பதில்களை 

http://tamilmantram.com/vb/archive/index.php/t-5690.html

Sunday, June 25, 2023


 திரைப்படங்கள் என்பன ஒரு கருத்தியலை போதிக்கும் ஊடகம்தான் , வரலாற்றை திரித்து கூறும் மற்றும்  தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்தோடோ  இருந்தால் கண்டிப்பாக அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

இவைநீங்களாக படைப்பாளிகளின் படைப்பாற்றல்கள் ஒன்றுகூடி சங்கமித்து அருவியாக கொட்டும்பொழுது அதை கிடைக்கும் அனுபவம் மனிதனுக்கு வேறு எதிலும் கிடைக்காது.


தேவர் மகன் படத்தில் அப்படி திரித்துக்கூறப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய காட்சிகள் இல்லை. சாதிப்பெருமை பேசும் திரைப்படம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆமாம், குறிப்பிட்ட சாதி பற்றிய படம்தான் அது. சமூகத்தில் ஒரு குழுக்களைப்பற்றி எடுக்கப்பட்ட எத்தனை திரைப்படங்களை கண்டு கழித்து ரசித்திருந்திருக்கின்றோம்?

"the last samurai " திரைப்படத்தில் ஜப்பான் நாட்டில் இருந்த சாமுராய் கள் வீர தீரங்கள் குறித்து சிலிரித்துப்போய் பார்த்திருந்தோம்?

"inglorias basterds" திரைப்படத்தில் யூத குழு வீரர்களின் திறமைகளை பார்த்து பாராட்டியிருக்கின்றோம்.

இப்படி பல படங்கள் உள்ளன.

இன்றும் அமெரிக்க அருங்கட்சியகங்களில் குழுக்களாக வாழ்ந்த மக்களின் வாழ்க்க்கைமுறை , உள்  சண்டைகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் குறித்து அறிந்து வியக்கின்றோம்?,

அதை சுவைபட ஒரு இட்டுக்கட்டி கதைமூலம் சொல்லுவது என்பது சாதாரணமானது அல்ல. அதை திறம்பட மற்றும் செவ்வனே செய்து மக்களின் மனதில் சேர்ப்பதில் மாபெரும் வெற்றியாளனாகத்தான் கமல் ஹாசன் அவர்கள் இருக்கின்றார்.

இன்னொருபடமான விருமாண்டி .

சண்டியர் என்ற பெயரை கிருஷ்ணசாமி விரும்பாததால் பெயர் மாற்றப்பட்ட படம். தென் மாவட்டங்களில் ஒரு  மக்கள் பாத்திரம் கொண்டுள்ள பெயர். மற்ற மாவட்டங்களில், மைனர், தல , என்று பல பெயர்களில் உள்ளது.

இந்த சண்டியர் கதாபாத்திரமானது மற்ற மாவட்டங்களில் எப்படியோ தென் மாவட்ட கிராமங்களில் ரெம்ப வேறு மாதிரியானது.


எதிலும் அடங்காமல் சண்டித்தனம் பண்ணுவதை  யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதுதான் சிறப்பு.


எங்க ஊர் உசிலம்பட்டி ஆனதுதான்,  சுற்றியுள்ள 48 கிராமங்களுக்கும் டவுன். அங்கிருந்து வரக்கடைசியில் பொழுது களித்து கழிக்க உசிலம்பட்டி  வரும் கிராம சண்டியர்கள் தங்களது அடிப்பொடிகள்  நண்பர்களுடன் வருவார். தங்கள் ஊரு நினைப்பிலேயே சண்டித்தனம் செய்து, ஓட்டல்கள், திரையரங்கில், கடைகளில் , மது கக்கடைகளில் ஓரண்டியிழுத்து அடிவாங்குவார்கள், இறுதியில் , நான் யார் தெரியுமா என்று சொல்லி தாட்டியம் காண்பிக்கையில், ஓ , பள்ளப்பட்டி சண்டியனா , சரிப்பா விடுப்பா , சரி போங்கப்பா எல்லோரும் என்று சொல்லி களைந்து போவர். இது ஒரு சாம்பிள்தான்.இதோபோக, நகரம், கிராமம், குக்கிராமம் போற இடங்களுக்கு தகுந்தவாறு சண்டியத்தனம் இருக்கும்.


விருமாண்டி, கிழக்கு சீமையிலே பாண்டியன், எங்க சின்னராசா படத்தில், பாக்யராஜுக்கு மாமா பையன், போன்ற மற்றும் பலதரப்பட்டிய சண்டியர்கள் மதுரை & தேனி மாவட்டங்களில்  உள்ளனர், 


இதில் என்ன திரைப்பட பெயர் பிரச்சினை என்கிறீர்களா?


இந்த சண்டியர்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் இருக்கமுடியும். மாரிசெல்வராஜ் , கிருஷ்ணசாமி (இவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான்) எல்லோருக்கும் இந்தப்பெயர் ஆனது அந்த சாதியின் வீரத்தை தூக்கி மற்றவர்களின் துன்ப குமுறல்களை இயலாமையாக காட்டுகின்றதே என்ற கோபம்தான்.


ஆனாலும், கமல் ஹாசன் அவர்களின் இத்திரைப்படங்கள் எல்லாம் பல்சுவைகொண்ட தரமான ஆவணங்கள்தான். மாறாக எந்தவிதமான கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதுதான் எனது எண்ணம்.


மாரி செல்வராஜ் அவர்களே அதற்கு சரியான உதாரணம். கமல் ஹாசன் அவர்களின் படைப்பு எவ்வளவு யதார்த்தமாக இருந்திருந்தால், மாரிசெல்வராஜ் அவர்கள் அதை உள்வாங்கி தன்னை மேம்படுத்தி, பெரிய தேவர் இருக்கும் இடத்தில் எனது தந்தையை கொண்டுவரவேண்டுமென்று வடிவேலுவை அங்கு நிறு த்தியிருப்பார்.

கமல்ஹாசன் அவர்களுக்கு சபாஷ். அவருக்குத்தான் உண்மையில் வெற்றி.


Friday, October 14, 2022

"out of box thinking" எனும் சொற்றொடர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆக்கப்பூர்வமாக , புதுமையான வழியில் , நூதனமான வழியில் மற்றும் ஒரு விதிகளுக்குட்படாமல் சுதந்திரமாக சிந்தித்து தீர்வு கானல் அதுதான் "out of box thinking" என்று புரிந்திருப்பீர்கள் மற்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல. தமிழில் "நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்" மற்றும் "குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுதல்" என்ற சொலவடைகள் உள்ளன. இவைகள்தான் "out of box thinking" இன் அடிப்படை . ஆமாம், நிழலிலேயே இருந்ததால் அதன் அருமை தெரியாது. வெளியே வெயிலுக்கு வந்தால்தான் நிழல் எப்படிப்பட்டது என்று புரியும். இந்த உலகத்தைப்பற்றி அனுபவித்து , மகிழ்ந்து, ஆச்சரியப்பட்டு , புகழ்ந்து எத்தனையோ கவிஞர்கள் எழுதிய கவிதைகளை படித்திருப்பீர்கள். அவற்றில் பாரதியார் கவிதை முற்றிலும் மாறுபட்டு "out of box thinking" வழியில் இருக்கும் . ஆமாம், நான் இந்த பூமி இப்படிப்பட்டது , நான் இப்படியிருக்கின்றேன் என்று பூமிப்பந்ததுக்குள் இருந்துகொண்டே சிலாகித்து எழுதும் கவிஞர்களிடையே , பூமிக்கு வெளியே வந்து பூமியை ஒரு மேசைமீது இருக்கும் பொருளாக ஆக்கி அதை உருட்டி புரட்டி பார்த்து அதிசயப்பட்டு பாரதியார் எழுதிய கவிதைதான் "நிற்பதுவே நடப்பதுவே" . இளையராஜா அவர்கள் அதறகு அருமையாக இசை அமைத்து அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார். (https://www.youtube.com/watch?v=84KN3uvBnFE) ஆகவே ஆக்கத்தின் விளைவானது நாம் எந்த சூழல், மற்றும் எந்த முன்நோக்கில் இருக்கின்றது என்பதைப்பொறுத்துதான் அமையும். சொல்ல வந்த விசயத்திற்கு , தேவைக்கு அதிகமாகவே பில்டப் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்து மதத்திற்குள்ளே இருந்த வரையில் ஒரு வெறியனாக இல்லாவிட்டாலும், அதீத பற்று கொண்டிருந்த நான், வெளிவட்டத்திரு வந்த அப்புறம்தான் அதுப்பறிய உண்மைகள் புலப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்களில், கிரேக்க, எகிப்து , சீன, ரோமானிய , ஏன் ஜப்பானிய புராணங்கள் கூட ஆர்வமாக எடுக்கப்படும் சூழலில் , இந்திய புராணக்கதைகள் என், அந்த அளவிற்க்கு ஆர்வம் காட்டப்படவில்லை? ராமாயண கதைகள் இந்தியாவைத்தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் தனித்தனி கதைகளாக பிரபலப்பட்டிருந்தாலும், உலக திரைப்படத்தினை ஈர்க்கவே இல்லை . என்? "out of box thinking" வந்தப்புறம் தெரிகின்றது, இவர்கள் இதைச்செய்யணும் இவர்கள் இதைச்செய்யக்கூடாது என்று இலக்கணம் வகுத்து நம்மை ஆதிக்கம் செய்ததுபோல பிரபஞ்சத்தின் முதல் ஆகாய விமானம் இந்து புராணத்தில் உள்ளது, முதல் பிளாஸ்டிக் சர்ஜரி யானது விநாயகர் தலை மாற்றம் ஆகும் இது குறித்து இந்து புராணத்தில் உள்ளது. கம்பியூட்டருக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் . உலகின் முதல் கற்பாலம் காட்டியது அனுமன் சேனைகள். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு நேரே வருகையில் நாசா சொர்க்கை கோள்கள் செயலற்று நின்றுவிடும். உலகத்தின் புவியீர்ப்பு விசையின் மைய்யமானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜ பாதத்தின் கீழே உள்ளது . என்று பலவாறாக புருடா விடுவது இந்து மதத்தைப்பற்றி வெளிநாடுகளில் நகைப்பினைத்தான் உண்டாக்கியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், வர்ணாசிரம கருத்தியல்கள் இப்பொழுது உலக பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக ஆகியிருக்கின்றது. மற்ற மதங்களில் அதிசயங்கள் நிகழ்த்தப்படுவது குறித்து நிறைய கதைகள் இருந்தாலும், இந்துமதம் மற்றும் சமஸ்கிருதம் இவைகள் நவீன காலத்துக்கு அறிவியலுக்கே சவால் விடுவது ஒரு வெறுப்பினைத்தான் விதைத்திருக்கின்றது. நான்தான் முன்னோடிஎன்று சொல்லும் தோரணையே நான்தான் மேம்பட்டவன் என்று சொல்லுதலாகும் கிரேக்க புராணங்களில் வரும் கதைகளை உள்ளடக்கினால் மகாபாரதக்கதைகளில் 45% தான் வரும், மகாபாரதம் போல ஆயிரக்கணக்கான புராணங்கள் இந்தியாவில் உள்ளன, ஆனால் கிரேக்க புராணங்கள்தான் உலகில் அதிகம் விரும்பப்படும் புராணமாகும். ஆதிக்கம் மற்றும் மேட்டிமையை விட்டொழித்தால்தான் இந்துமதம் அதன் பெருமையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.


Monday, October 10, 2022

 சுவைக்காக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான் மனிதன் அதன் காரணமாக , செரிமான சக்தி குறைந்துபோபோனது. சிட்டுக்குருவி  அலட்சியமாக சாப்பிடும் பச்சரிசியை மனிதன் சாப்பிட்டால் வயிறு இடம் மாறிவிடும்.


பூமியில் வெயில் அதிகமாக விழும் பூமத்திய ரேகை பகுதியில் வாழும் மக்களின் உடம்பில் சூரியஒளியின் வீரியம் அதிகமாக தாக்குவதால் அவர்கள் தோல் கடினமாகி Melaninஅதிகம் சேர்க்கப்பட்டு தோல் கருப்பாக ஆகிறது. அதுபோல மற்ற வெயில் குறைந்த  இடங்களில் வாழும் மக்களுக்கு வெயில் வேண்டி, தோல் மிருதுவாக்கப்பட்டு, மெலனின் இல்லாமல் வெளிர் நிறத்தில் தோல் ஆகின்றது.

அமேரிக்கா & ஐரோப்பா நாடுகளுக்கு இடம் பெயரும் இந்தியர்களுக்கு பெரும்பாலும் வைட்டமின்-D குறைபாடு வருவதற்க்கு இதுதான் காரணம். 

ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வரும் மேற்கோள் "Life will find a way.” 

மனிதன் என்னதான் தனது பழக்க வழக்கங்கள்கை மாற்றிக்கொண்டாலும் மனிதவாழ்க்கையானது தனது பயணத்திற்கான பாதையை கண்டுபிடித்து செல்லும்.

பெண்ணானவள் ஆண்  சார்பு தேவையில்லை என்ற நிலை கொள்வதாலோ அல்லது ஆண் - பெண் பாலின சமதத்துவ சித்தாந்தத்தாலோ,  அல்லது என்ன பழக்க மாறுதல் காரணத்தினாலோ மனித பாலின இயக்கங்களில் ஒரு மாறுதல்  வர ஆரம்பித்து இருக்கின்றது.

பெண்தன்மையுடன் பிறக்கும் ஆண் மற்றும் ஆன் தன்மையுடன் பிறக்கும் பெண் , குழந்தையின்மை,  கருத்தரிப்பு   மருத்துவமனைகளின் வளர்ச்சி இவைகளெல்லாம் மிக சாதாரணமாக இருக்கின்றது.

வெளிப்படையாக தெரியும், தோல் குறைபாடு , பருக்கள், உடல் குறை  இவைகள் வந்தாலே மனது என்ன பாடுபடும். எத்தனை பேர் மனமுடைந்து தவறான முடிவுகளை எடுக்கின்றார்கள்.

அப்படியிருக்கையில் பாலின குறைபாடு என்பது எப்படிப்பட்ட மாணவலியை கொடுக்கும்? பெற்றோர்கள், உடன் பிறந்தோர், நண்பர் அனைவரும் எப்படி ஒரு அன்பான ஆதரவினை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு? ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்வதுதான் அவர்கள் விதியாக இருக்கின்றது.

ஆனால் இப்பொழுது ஒரு விழிப்புணர்வு வந்து இருக்கின்றது. இவர்களும் சமூகத்தில் சமமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள்.  உள்ளக்கிடக்கினை அப்படியே பகிர உதவும் ஊடகத்தின் அசுர வளர்ச்சிதான் இத்தற்கெல்லாம் முக்கிய காரணம்.

அந்தக்காலத்தில் ஒரு சிலர் சொல்லுவது மட்டுமே மக்களிடையே பரவும், மக்களின் கருத்துக்கள் அதுதான் என்று கற்ப்பிக்கப்படும். ஆனால் இந்தக்காலம் ஊடகத்தின் காலம். மக்களின் உணர்வுகள் எளிதாக உலகம் முழுதும் பரவும்.

"பிக் பாஸ்" போட்டியாளராக ஒரு Transgender நுழையில் அவரை பேசிய பேச்சு சூப்பர். அவருக்கு மேடையும் , களமும் கொடுத்த விஜய் டிவி சூப்பர்.

நான் ஏற்க்கனவே சொன்னது போல நீண்டகால மாற்றத்தில், ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் படி இயற்கை மாறும்.ஏனென்றால் "Life Will find Way "


Saturday, October 08, 2022

சென்றவாரம் நீயா நானா நிகழ்ச்சியானது இன்றைய இளைய தலைமுறை மற்றும் முந்தைய 3 தலைமுறையையோ சேர்ந்த பெண் பாடல் ரசிகர்களின் எதிர் எதிர் உரையாடல் ஆகும்.

   பெண்களின் கலாரசனையானது மிக ஆழமானது அதைஎப்படி அனுபவிக்கின்றார்கள் என்றறிவதற்காக பெண்களைமட்டும் என்று கோபி சொன்னார். 

தமிழ்நாட்டுப்பெண்கள் வழக்கம் போல காதலன், கணவன் , வரப்போகும் காதலன், வரப்போகும் கணவன் பற்றிய பாடல்களைத்தான் சொல்லி சிலாகிக்கபோகின்றார்கள் என்று நினைத்தேன். 

பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது, ஆனால் ஆச்சரியப்படும்படியாக சிலர், வாழ்வியல், மனவியல் குறித்த பாடல்களைப்பற்றி ஆர்வமாக பேசினார்கள்.

 பெரும்பாலும் பாடல்வரிகளுக்காகவே பாடல்களை ரசிப்பதாக சொன்னார்கள். அது ஓரளவிற்கு உண்மையோதான் என்றாலும் , என்னைப்பொறுத்தவரையில் இசையும் , ராகமுமே ரசனையின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அதன் பிறகு அடிக்கடி காதில் விழும் பாடலானது நம்மையறியாமல் நம் மனதில் பதிந்தது , பின்னொரு நாளில் கேட்க்கும் பொழுது , நமது காதில் விழுந்த அந்த பழைய காலம் நினைவுக்கு வந்து மனது பரவசமாகின்றது. 

 சிறுவயதில் சிவாஜி ரசிகனாக இருந்து சிவாஜிபாடல்களை மட்டும் விரும்பிகேட்டிருந்தேன், ஆனால் விதியானது வலியது. உசிலம்பட்டியில் தினமும் காலையில் இருந்து இரவு வரை 8 திசையெங்கிலும் ஒலிக்குழாய் கட்டி எம்ஜியார் காதல் மற்றும் தத்துவ பாட்டுக்கள் போட்டு போட்டு நான் விரும்பாமலே எனது காதுக்குள் பலவந்தமாக திணித்தார்கள்.. கொடுமையே என்றுதான் கடத்தினேன். ஆனாலும் என்னையறியாமல் என் மனதிற்குள்ளும் நுழைந்திருக்கின்றது போல இருக்கின்றது.

 படிப்பு முடிந்து, வேலைக்குப்போய், திருமணமாகி பிள்ளைகள் பிறந்தபின் ஜப்பான் நாட்டிற்க்கு நகர்ந்த பிறகு யோக்கோகாமா நகரில் ஓரு பூங்காவில் "பொன்னெழில் பூத்தது புது வானில் " பாடல் ஒலித்ததை கேட்டு அப்படியே திடுக்கிட்டு அத்திசைநோக்கி ஓடினேன், பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு தமிழர் அவரிடம் உரையாடி 3 எம்ஜியார் பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு வந்தேன். 

அதன் பிறகு எம்ஜியார் பாடல்கள் அனைத்தையும் சேகரித்து கேட்க்க ஆரம்பித்தேன். வார இறுதிகளில் இன்றும் எம்ஜியார் காதல் & தத்துவ பாடல்களை கேட்டு இன்புறுகையில், காலப்பயணம் செய்து , கவலைகளே இல்லாத அந்தி சிறுவயது காலத்திற்குள்ளே சென்றுவிடுகின்றேன்.

 மலைப்பாதை நடைப்பயணகளில் "The gods must be crazy" திரைப்படத்தின் பின்புல இசையை ஒலிக்க விடுவது வழாக்கம். அதில்பழக்கப்பட்டு எனது துணைவியார் தன்னியறியாமல் அடிமைப்பட்டு அந்த இசை இல்லாமல் நடைப்பயணமே கிடையாது என்கின்றார் இப்பொழுது. 

 அதுபோலவே அர்த்தமே விளங்காத இந்திப்பாடல்களும் இசை மற்றும் ஆஷா, கிஷோர் , குமார் சானு, அல்கா, கவிதா கிருஷ்ண மூர்த்தி, அனுராதா , உதித் நாராயண் இவர்களின் மந்திரக்குரல்களுக்காக , எனது மனதை கொள்ளை கொண்டுவிட்டன. 

 ஆகவே ஒரு பாடலானது பிடித்து போவதற்கு பாடலின் வரிகள் (lyrics) ஆனது அனைத்திற்க்கும் கடைசி காரணியாகும் என்பது எனது எண்ணம். பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்து பேசச்சொன்னால் பேசிக்கொண்டே இருப்பேன் அந்த அளவிற்க்கு ஆழமாக திரைப்பாடல்களை அனுபவித்து ரசிக்கின்றேன்.

 அந்த விதத்தில் இளையராஜா அவர்களை பற்றி பேசச்சொன்னால் வாழ்நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கும் அளவிற்க்கு அவரது இசையை அவதானம் செய்திருக்கின்றேன். 

 இந்நிகழ்ச்சியில் 2 விஷயங்கள் கவனித்தேன். ஒன்று ஆணாதிக்க மனப்பான்மை குறித்தது மற்றொன்று ஆச்சரியமாக குவாண்ட்டம் இயற்பியல் குறித்து. இவைகளைப்பற்றி பின்னர் பதிவிடுகின்றேன்,

Wednesday, September 28, 2022

போஸ்டர் என்பது திரைப்படத்தின் முகம் போன்றது. திரைப்படத்தின் கருவினை ஒரு படத்தின் மூலம் நயம்பட்டச்சொல்லும் இந்தக்கலையானது மிகவும் ரசனைக்குரியதாகும். நிறைய போஸ்டர்களை சேகரித்து வைத்திருக்கின்றேன். "மிட் நைட் இன் பாரீஸ்" திரைப்படத்தில் ஓவன் வில்சன் அவர்கள் பாரீஸ் நகரில் சேய்ன் நதிக்கரையோரம் நடந்துவரும் காட்சியானது பிரபலமான போஸ்டர் ஆகும். நம்ம ஷாருக்கான் அவர்கள் "கல் கோ நா கோ" திரைப்படத்தில் நியூ யார்க் நகரில் ப்ரூக்ளின் பாலத்தில் நடந்துவரும் காட்சி, இது போன்ற பல திரைப்படக் காட்சி போஸ்டர்களை நம் நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும். சமீபத்தில் "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்தில் துஷாரா விஜயன் அவர்கள் பாண்டிச்சேரியில் நகரில் ஒரு ரோட்டு பாலத்தில் நடந்து வரும் காட்சி மிக அற்புதமாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டு இருந்தது. நல்ல ஒளியமைப்பு, நல்ல பிரேம், கண்கவர் வண்ணங்கள் , நவநாகரீக உடையணிந்த புதுமைப்பெண் என்ற அளவில் மட்டுமல்லாமல் அதில் உள்ள அரசியல் காரணமாக மிகவும் பிடித்துப்போனது. (இந்தக்காட்சியினை ஏன் போஸ்டராக்காமல் விட்டார்களோ தெரியவில்லை.) ப.ரஞ்சித் அவர்கள் நான் நினைக்கும் அரசியலை அப்படியே திரையில் வடித்துத்தருகின்றார். காந்தி சட்டையை கழற்றியதற்கும் அம்பேத்கர் கோட்டை போட்டதற்க்கும் பினால் பெரிய அரசியலே உள்ளது என்று கபாலியில் சொல்லியிருப்பார். அதன் நீட்சிதான் "நட்சத்திரம் நகர்கிறது". ப.ரஞ்சித்தின் அரசியலை செவ்வனே நடத்திக்கொடுத்திருக்கின்றார் துஷாரா விஜயன். அடங்காமல் அட்டகாசம் பண்ணும் ஒழுக்கக்கேடான பெண்ணாகத்தான் இருக்கின்றார் துஷாரா விஜயன், அதில் என்ன அரசியல் கண்டாய் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் உள்ள நுண் அரசியலானது உங்கள் உள்மனதால் உள்வாங்கப்பட்டு ஒரு மூலையில் வைக்கப்பட்டு பெருகி பெருகி பின்னாளில் உங்களை நேரடியாகவே அந்த அரசியலை உணர வைத்துவிடும். என்ன அட்டக்கத்தி மாதிரி ஜனரஞ்சகமாக எடுத்திருந்தால் மிக நன்றாக பேசப்பட்டு இருந்திருக்கும் .