Sunday, July 09, 2023

தமிழ் மன்றம் இளசு அண்ணா

 உயிர் வாழ்தல் எனும் நோக்கத்தை அடுத்து தேடுதல் என்பது மனிதனின் முக்கியமாக இருக்கின்றது. எத்தனையோ தேடல்கள், 


எந்த ஒரு கதையையும் (நாவல், சிறுகதை, திரைப்படம்) பார்த்தால் அதன்  மூல முக்கிய கருவானது தேடலாகத்தான் இருக்கும். மனிதனின் இந்த தேடலை அருமையானதொரு வியாபார உத்தியாக்கி வெற்றிகொண்டது கூகிள். 

பலவகை தேடலில் சுவாரசியமானது, நேரில் பார்க்காத ஒருவரை அவரைப்பற்றிய கேள்விகளினால் தேடுவதாகும், 

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் தேன்மொழி என்பவரை பற்றி அனைவரும் சிலாகித்து பேசுவதை  கேட்கையில் அவரை சந்திக்கத்துடித்து தேடியலைந்து தன வாழ்க்கையை தொலைத்து பின்னர் எப்படி வாழ்க்கையை சரி செய்கின்றார் அந்த கதாநாயகன் என்ற கதை.

மாறா திரைப்படத்தில் கதாநாயகன் சுவற்றில் வரைந்த ஓவியங்களை கண்டு பிரமித்து, வரைந்தவரின் உள்ளக்கிடக்கை எப்படிப்பட்டதாக இருந்தால் இப்படி ஒரு ஓவியமாக வரும் என்று அவரை சந்திக்க தேடியலைந்து கண்டுபிடித்து சேரும் அந்த கதாயாயாகியின் கதை.

Wicker Park திரைப்படத்தில் திருமணமான விளம்பர நிர்வாகி ஒருவர் தற்செயலாக பார்க்கும் ஒருபெண் தனது பழைய காதலி இருப்பதால் அவரை வெறித்தனமாக தேடியலைந்து சந்திக்கும் கதை .

வெற்றிவிழா திரைப்படத்தில் சுயத்தை தொலைத்து தன்னையே தேடியலைந்து அறியும் கதாநாயகனின் கதை.

(இன்னும் பல)

இவைகள் போலவே எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

ஆமாம் நானும் இளசு அண்ணா என்பவரை தேடியலைந்து இன்றுவரை சந்திக்காமலும் இருக்கின்றேன். நான் மட்டுமல்ல என்னைப்போல நூற்றுக்கணக்கணவர்கள் தேடியலைந்து கொண்டுதானிருக்கின்றனர்.

2000ம் ஆண்டு வாக்கில் , முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் அதிகம் இல்லாத நாட்களில் http://tamilmantram.com/ தளம்தான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. துபாய் , அமெரிக்கா , ஜப்பான் , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , டென்மார்க் (இன்னும் பல )  நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த தமிழர்களை இணைத்த அந்த தமிழ் மன்றத்தில் குழு தலைவராக இருந்தவர்தான் இளசு அண்ணா . நேரில் சந்திக்காத, முகமறியாத ஒருவர் எப்படி நூற்றுக்கணக்கணவரின் அன்புக்குரிய அண்ணனாக ஆகா முடியும்?

முடியும்தான். நான் கீழே கொடுத்துள்ள இணைப்பினை பாருங்கள் அவரை காணாமல் துடித்து போன தம்பி தங்கைகளின் பதிவுகள்.

நான் குடும்பத்தை பிரிந்து 2004ம் வருடம் ஜப்பான் நாட்டிற்க்கு சென்றபொழுது பிரிவுத்துயர் மற்றும் குடும்ப நோயினால் பாதிக்கப்பட்டு மனம் குழம்பிஇருக்கையில்தான் இளசு அண்ணா அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் தமிழ் மன்றத்தில் கிடைத்தது. அவரும் புலத்தினை  பிரிந்தது இங்கிலாந்தில் பணியாற்றுவதாக சொன்னார். ஆனால் உண்மை பெயர் மற்றும் தொடர்பு விவரத்தை தரவேயில்லை. உடன் பிறந்த அன்னான் போல என்பால் அக்கரை கொண்டிருந்தார்.

அவர் என்னை மிகவும் பாதித்தது ஒரு உரையாடலில்தான்.

மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை உண்டா என்ற தலைப்பிலான விவாதத்தில் நான் ஒரு பதிலிட்டிருந்தேன்.

அதைக்கண்டு வியந்த இளசு அண்ணா அவர்கள் ஒரு அறிவியல் கோட்பாட்டினை சொல்லி , இப்படிப்பட்ட ஒரு சிக்கலான அறிவியல் கோட்பாட்டினை இப்படி எளிதாக விளக்கிவிட்டீர்களே இந்த புதிரை  விடுவித்த அந்த உலகப்புகழ் பெற்ற அறிவியல் வித்தகர்கூட குழப்பமான விளக்கம்தான் தந்திருந்தார் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.

நான் திடுக்கிட்டு போய்விட்டேன். அந்த அறிவியல் கோட்பாட்டினை படித்து பார்த்து வியந்தேன், அப்படியே நான் நினைத்தது போலவே இருந்தது. அப்பொழுதுதான் எனக்குள் இயற்பியல் அறிவு தொடர்பான சிந்தனைகளும் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அது குறித்த ஆராய்ச்சியில் இன்னும் இருக்கின்றேன். 

அது குறித்து பின்னர் விளக்குகின்றேன். 

இங்கே பாருங்கள் இளசு அண்ணா குறித்து மற்றவர்களின் தேடல் மற்றும் கோரிக்கைகள் . 

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5344.html

இதில் பாருங்கள், அவர் திரும்ப வருவதாக அறிவித்த பின் மற்றவர்களின் பதில்களை 

http://tamilmantram.com/vb/archive/index.php/t-5690.html